பாகிஸ்தானில் ஏற்பட்ட மின்தடை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக பாகிஸ்தான் இருளில் மூழ்கிப் போனது.
அதன்படி பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி மற்றும் முல்தான் போன்றவை மின்துண்டிப்புக்கு உள்ளாகின.
மின் துண்டிப்கை உறுதிப்படுத்திய பாகிஸ்தானின் மின்சக்தி அமைச்சர் ஒமர் அயூப்கான், மின்சக்தி பரிமாற்ற அமைப்பில் அதிர்வெண் திடீரென சரிந்ததால் நாடு தழுவிய மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
குட்டு நகரில் உள்ள ஒரு கட்டத்தில் தேசிய மின் விநியோக அமைப்பின் அதிர்வெண் திடீரென 50 முதல் பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டதால் மின் துண்டிப்பு ஏற்பட்டதாகவும் அயூப் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறெனினும் இதற்கு பின்னால் உள்ள காரணங்களைத் தீர்மானிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள மக்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.