சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் பலத்த காயம் ஏற்பட்டது.
தாமிரபரணி படத்திற்கு பிறகு விஷால்-ஹரி மீண்டும் இணைந்திருக்கும் படம் பூஜை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் அமைத்து நடத்தப்பட்டு வந்தது. அங்கு விஷால் ஸ்டண்ட் நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அந்த சண்டைக்காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படமாக்கிக் கொண்டிருந்தார்.
காட்சிப்படி விஷால் ஒரு ஸ்டண்ட் நடிகரை தனது இடது கையினால் தாக்க வேண்டும். அப்போது ஸ்டண்ட் நடிகர் விலகி கொண்டதால் விஷாலின் கை விரல் அங்கிருந்த ஒரு தகரத்தின் மீது பட்டு ரத்தம் கொட்டிவிட்டதாம். உடனே விஷாலை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு அவருடைய கை விரலுக்கு 22 தையல்கள் போடப்பட்டுள்ளதாம். மேலும் விஷாலை ஒரு வாரம் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, இன்னும் 2 நாட்களுக்கு விஷால் இல்லாத காட்சிகளை பார்த்து படம்பிடிக்கப் போகிறாராம் ஹரி. இதை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தி உள்ளார்.