காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன்.
ஆனால் அதன் பிறகு இவர் இயக்கிய படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான இரண்டாம் உலகம் திரைப்படம் கூட படுதோல்வியைச் சந்தித்தது. இது செல்வராகவனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதிலிருந்து மீண்டு தனது அடுத்த படத்திற்கான வேலையில் பரபரப்பானார்.
சிம்பு-த்ரிஷா ஜோடியாக்கி விறுவிறுப்பான ஒரு காதல் கதையை தயார் செய்து அதை இயக்க தயாரானார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என உறுதி செய்யப்பட்டது. விரைவில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் திடீரென இந்தப் படம் கைவிடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இரண்டாம் உலகம் படம் வெளியான போது, அதன் தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாவுக்கும் செல்வராகவனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய பிரச்சனை ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த பிரச்னை இன்னும் தீராமல் உள்ளது.
இந்த சூழலில் புதிய படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்பிற்கு செல்லும் நிலைக்குத் தயாரானார் செல்வராகவன். ஆனால் புதிய படத்தின் தயாரிப்பாளர் ரேடியன்ஸ் மீடியாவின் உரிமையாளர் வருண் மணியன், செல்வராகவனை அழைத்து முந்தைய படமான இரண்டாம் உலகம் படத் தயாரிப்பாளருக்கும், உங்களுக்கும் இருக்கும் பிரச்சனையை முடித்துவிட்டு வாருங்கள். அதன்பின்னர் இந்தப் படத்தைத் தொடங்கலாம் என்று அதிரடியாக கூறிவிட்டார். இதனால் செல்வராகவன் அடுத்தப் படம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.