அரசு மரியாதையுடன் பாலச்சந்தருக்கு இறுதி சடங்கு நடந்து இருக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார். அதற்கு அவர் தகுதியானவர் என்றும் தெரிவித்தார். நூறு படங்களுக்கு மேல் இயக்கிய பாலச்சந்தர் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். பெசன்ட் நகர் மயானத்தில் நேற்று முன்தினம் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
ரஜினி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றனர். இறுதி சடங்கில் பாலச்சந்தருக்கு அரசு மரியாதை அளிக்கப்படாததற்கு குஷ்பு வருத்தம் தெரிவித்து உள்ளார். டுவிட்டரில் இது குறித்து அவர் கூறும் போது, மறைந்த கன்னட நடிகர்கள் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன் போன்றோரின் இறுதி சடங்கு பெங்களூரில் அரசு மரியாதையுடன் நடந்தது.
கேரளாவிலும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. அது போல் பாலச்சந்தரின் உடல் தகனமும் அரசு மரியாதையுடன் நடந்து இருந்தால் வரவேற்க தக்கதாக அமைந்து இருக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட அரசு மரியாதை கூட அரை குறையாகத்தான் இருந்தது.
தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சாதனையாளர்களை மதிக்க வேண்டும் என்றார். பாலச்சந்தர் மறைவு குறித்து நடிகர் கமலஹாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழ் திரையுலகின் கொடை வள்ளலாக வாழ்ந்தவர் பாலச்சந்தர். நூறு படங்கள் இயக்கியது மட்டுமன்றி நூறு கலைஞர்களையும் அறிமுகபடுத்தி உள்ளார். அவர்களில் நானும் ஒருவன். என் வற்புறுத்தலின் பேரில் உத்தமவில்லன் படத்தில் நடித்தார். அந்த பதிவு என் வாழ்க்கையின் முக்கிய பதிவாகும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.