செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் தழும்பூ | தீபச்செல்வன்

தழும்பூ | தீபச்செல்வன்

1 minutes read


விழிகளில் தீயையும் கனல் நீரையும்
சுமந்த சனங்களிடையே
உன்னை கண்டேன்

கறுப்பு தலைப்பட்டியாலும்
மறைக்க இயலாது
நெற்றியில் ஒரு தழும்பு
கேசங்களில் அலைச்சலின் பாடல்
போர் ஊழியில் திருகப்பட்ட குடும்பத்தின்
நீதிக்காய் நெஞ்சுருக
குரலிட்ட தருணத்தில்
எனக்கொரு புன்னகையை தந்தாய்

தீரா இழப்பை தணிக்க முற்பட்ட
உன் மௌனமும்
ஓரிரு வார்த்தைகளும்
நினைவேந்தல் பாடல்களில் கலந்துபோயின

மாய்க்கப்பட்டவர்களின் சிதை நிலத்தில்
பூக்களையும்
தின் பண்டங்களையும் விட்டுவந்த வேளையில்
கனத்தவென் இதயத்தையும்
கறுப்புச் சட்டையுடன்
நீ ஏற்றிய
விளக்கருகே வைத்துத் திரும்பினேன்

தகிக்கும் வெண்மணலில்
சூரியன் உறிஞ்சிய நெய்ப்பந்தமாய்
உருகிக்கிடந்தேன்
தீராத் தாகம் ததும்ப
வாழ்வின் பேரவா
உன் கண்களில்
நதியென ஊற்றெடுக்கக் கண்டேன்

இவ் ஆண்டு நினைவேந்தல் நாளில்
இரு மலர் கொத்துக்களுடன் வருவேன்
ஒன்று
கொல்லப்பட்டவர்களை
நினைவுகூர
மற்றையது
உன் கரங்களில் தந்துவிட.

தீபச்செல்வன்

நன்றி – ஆனந்த விகடன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More