சயனைட் – தீபச்செல்வன்:
ஆசிரியர் குறிப்பு:
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரது மூன்றாவது நாவலிது.
புயலுக்குப்பின் அமைதி என்பது எல்லா நேரங்களிலும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. புலிகளிடையே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்தவருக்கு அந்தத் துறையில் அவருக்கிருக்கும் நிபுணத்துவத்தை மட்டும் பார்த்து யாரும் வேலை கொடுப்பதில்லை. பழைய போராளியைச் சேர்த்துக் கொண்டு பின்னால் வரும் சிரமங்களை யார் எதிர்கொள்வது. தோற்ற இனத்தின் போராளிகள் வீரமரணம் அடைந்திருந்தால் அவமானம், துன்பம் இன்னபிற சங்கடங்களிலிருந்து தப்பித்திருக்கலாம்.
புலிகளில் ஒரு தளபதியாக வீரச்செயல்கள் பலபுரிந்து, ஒரு துரோகியால் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிறையில் சித்திரவதைக்குள்ளாகி, மனைவி, மகளுடன் சேர்ந்து புதுவாழ்வு வாழ வருபவனின் கதை இது. கடந்த காலமும், நிகழ்காலமும் ஒன்றின் மீது ஒன்று படிய கதை நகர்கிறது.
இராணுவம் பிடித்துச் சென்றவர்கள் திரும்ப வருவதற்கான சாத்தியங்கள் குறைவு. எத்தனைபேர் காத்திருந்து காலத்தில் தேய்ந்து உயிர்துறந்தார்களோ! எத்தனை பேர் வேறு மணம்செய்து காதலன் முன்வந்து நிற்கக் கதறி அழுதார்களோ! போரின் பெரிய கொடுமைகளில் ஒன்று இருக்கிறார்களா அல்லது இல்லையா என்று தெரியாமல் போவது. The pain of unknowing.
தீபச்செல்வன் கதையை இன்னும் Strong ஆக ஆக்கியிருக்க முடியும். கதையின் ஆரம்பத்தில் நமக்குத் தெரிந்த உண்மை களங்கள் பல கண்ட தளபதிக்குத் தெரியாது போவது இந்தக் கதையின் பெரிய பலவீனம். அடுத்தது ஒரு கோணத்தில் சொல்லப்பட்ட இந்தக் கதைக்கு இரண்டாவது கதைசொல்லி அவசியம். வளவன் சென்றபின் என்ன நடந்தது என்ற கதையை ( நாவலில் அவசரமாகச் சொல்லப்படுகிறது) வேழினி கொஞ்சம் விரிவாகச் சொல்ல வாய்ப்பு கொடுத்திருந்தால் கதை Effective ஆக வந்திருக்கும். தீபச்செல்வன் அடிப்படையில் ஒரு கவிஞர். மொழிநடை செறிவாக வந்திருக்கிறது. கதைக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
பிரதிக்கு:
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் 99404 46650
முதல்பதிப்பு டிசம்பர் 2024
விலை ரூ.360.
-சரவணன் மாணிக்கவாசகம்