‘சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்’ எனும் தலைப்பில் தனது 50 வது இதழ் மார்ச் 12ம் திகதி அறிமுகமாகியது. ஒரு நூல் வெளிவிடுவது, சஞ்சிகை வெளியிடுவது போன்ற விடயங்கள் எல்லாம் பிரசவ வலிக்கு ஒப்பானது. மிகச் சிரமம் மிகுந்த வேலை. அப்படியிருந்தும் அதன் தொடர்ச்சி என்பது அதனை விட கடின உழைப்பு செய்ய வேண்டி வரும். அப்படியாக கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்த வேலையை புலம் பெயர் தேசத்தில் இருந்து செய்து வருபவர் காலம் செல்வம் எனும் செல்வம் அருளானந்தம். காலம் தனது வாசகர்ளை புலம் பெயர் தேசதத்தில் மட்டுமன்றி ஈழத்திலும் இந்தியாவிலும் கால் பரப்பி உள்ளதும் இதற்கு சிறப்பாகும்.
கடந்த வருடம் கனடா சென்றிருந்த பொழுது அங்கு திரு செல்வம் எழுதிய ‘எழுதித்தீரப் பக்கங்கள்’ எனும் நூல் வெளியீட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மண்டபம் நிறைந்த இலக்கிய வாசகர்கள் அவரது நூல் வெளியீட்டுக்கு வந்திருந்ததையும் அவதானித்தேன். அப்படியான நிறைந்த வாசகர்களை பலமாக கொண்டு வெளிவரும் அதுவும் புலம்பெயர் தேசத்தில் வெளிவரும் இலக்கிய சஞ்சிகையாக ‘காலம்’ அமைகிறது. அந்த வகையில் அவரும் அவருடன் இணைந்து பணியாற்றும் அவர்களது இலக்கிய நண்பர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
தமிழ் சிறு சஞ்சிகையின் தொடர்ச்சி பற்றி நீண்ட பட்டியலை இடமுடியாதெனிலும் சில அவற்றை தக்க வைத்திருப்பதனையும் பதிவு செய்யாமல் இருக்க முடியாது. அறிவுக்கும் ஞாபகசக்திக்கும் ஏற்றாற்போல் ஈழத்தில் இருந்து வெளிவரும் ‘மல்லிகை’ இன்றைக்கு 50 வருடங்களாக வெளிவரும் சஞ்சிகையாக அறியப்படுகின்றது. அத்தோடு, நிறுவன மயப்படாமல் தனியொரு ஆளுமையால் வெளிக்கொணண்டுவரப்படட சஞ்சிகையாக மல்லிகையை பார்க்கலாம். தவிரவும் சிரித்திரன், கலைச்செல்வி, ஞானம், ஜீவநதி போன்றனவும் இந்த வரிசையில் அடங்குகின்றது.
புலம் பெயர் தேசத்தில் கனதியான இலக்கிய சஞ்சிகையாக காலம் அறியப்படுவது என்பதற்கு மறு கருத்து கிடையாது. அதுவும் தனியாளாக பலத்த பிரயத்தனங்களுக்கும் மத்தியில் சிரத்தை எடுத்து வெளியிடுவது சுலபமான காரியம் இல்லை.
“….தனியவே வாசகர் பலத்தையும், வர்த்தகர்களின் அனுசரணையோடும் பெரிய ஆட்பலம் ஏதும் இன்றி வெளிவரும் காலத்தை மேலும் மேலும் வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பொருளாதாம் அதற்கு இடமளிக்க வேண்டும். சில வர்த்தகப் நண்பர்கள் தாமாகவே முன் வந்து இது தொடர்ந்து வெளிவரவேண்டும் என விரும்பி அனுசரணை செய்கின்றனர். இது போன்ற கைகள் இன்னும் பரந்து வந்து உதவி செய்தால் காலமும் நீண்டு நெடுத்து நடக்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது……” என தனது அனுபவத்தை ஆசிரியரும் வெளியிடுபவருமாகிய செல்வம் கூறிச் செல்கிறார்.
அந்த வகையினில் வணக்கம் லண்டனும், நாச்சியார் நிகழ்ச்சி ஒழுங்கு அமைப்பும் காலத்துக்கு சிறு பங்களிப்பு கொண்டதில் மனநிறைவும் மகிழ்வும் அடைகின்றது.