இன்றுகாலை நுவரெலியா மாவட்டம் ஹட்டன் சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் ஒரு வீடு இருந்த இடம் தெரியாத அளவிற்கு மண் சரிந்து மூடியுள்ளதுடன், மற்றைய வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முழுமையாக சேதமடைந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றிந்ததாக தெரியவந்துள்ளது. அத்துடன் மற்றைய வீட்டில் குடியிருப்பாளர்கள் இருந்துள்ளனர் எனினும் எவருக்கும் காயங்களோ, உயிராபத்துக்களோ ஏற்படவில்லை.
கடந்த காலங்களில் மலையகத்தில் காணப்பட்ட வரட்சியான காலநிலை மாறி தற்போது பிற்பகல் வேளையில், அதிகளவான மழை காணப்படும் நிலையில் நீர் பாய்தோடியதால் மண் இறுக்கம் குறைவடைந்து சீமெந்தால் பாதுகாப்பாக கட்டப்பட்ட வேலியையும் உடைந்துக்கொண்டு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. முறையான பாதுகாப்பு மற்றும் வடிகான் அமைப்புகள் ஏற்படுத்தப்படாத நிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.
தொடர்ந்து இந்த கட்டுமானங்களில் பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படாது விட்டால் இவ்வாறான சம்பவங்கள் தமது பகுதிகளில் அதிகளவில் இடம்பெற்று உயிராபத்துக்கள் ஏற்படும் என்பதால் ஹட்டன் – டிக்கோயா நகர பிதா இந்த கட்டுமானங்கள் மற்றும் வடிகான் அமைப்புகள் சம்பந்தமாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அப்பிரதேச குடியிருப்பாளர்கள் உறுக்கமான வேண்டுகோள் விடுத்தனர்.