ஜப்பான் நாட்டின் தெற்கு ஒகினாவா தீவின் கடல் பகுதியில் அதிவேக புயல் ஒன்று உருவாகி இருக்கிறது. இதற்கு சூப்பர் புயல் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புயல் கியூசூ பகுதியை நோக்கி மணிக்கு 250 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது, இன்று காலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதுபோன்ற சூப்பர் புயல் கடல் பகுதியில் உருவாகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, ஜப்பான் நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சூப்பர் புயல் கரையை கடக்கும்போது இன்னும் வேகம் பிடிக்கும். அப்போது வரலாறு காணாத மழையும் பெய்யும். கடல் சீற்றமும் பயங்கரமாக இருக்கும். எனவே ஒகினாவா தீவின் கரையோர பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டை இதுபோன்ற ஹையான் என்னும் புயல் தாக்கியதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.