இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்திய, எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவதால், நோபல் பரிசு பெறுவோரின் பட்டியல் வெளியாகும் போது, உலகமே அதை ஆவலுடன் எதிர்பார்க்கும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த எட்வர்டு ஸ்னோடனின் பெயரும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் ரகசியங்களை உளவு பார்த்த அமெரிக்காவின் சதிச் செயலை அம்பலப்படுத்திய, அந்நாட்டை சேர்ந்த ஸ்னோடன் தற்போது, ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அமெரிக்க அரசு அவரை கைது செய்ய துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு பெறுவோர் பரிந்துரைப் பட்டியலில் ஸ்னோடனின் பெயர் இடம் பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அமெரிக்காவை மேலும் எரிச்சல் அடையச் செய்துள்ளது. தவிர, பெண் கல்விக்காக குரல் கொடுத்து, பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான பாக்., சிறுமி மலாலா மற்றும் போப் பிரான்சிஸ் ஆகியோரின் பெயர்களும், அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.