கிழக்கு உக்ரைனின் டோன்ஸ்க் நகர் விமான நிலையத்தில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் ரஷ்ய ஆதரவாளர்கள் தனி நாடு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். கிழக்கு உக்ரைனின் பெரும் பகுதி அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கு ரஷ்ய ராணுவம் ஆதரவு அளித்து வருவதாக உக்ரைன் அரசும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் அரசுக்கும் கிளர்ச்சிப் படை பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தற்போது இருதரப்புக் கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரான டோன்ஸ்க் பகுதி அரசுப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த நகரைப் பிடிக்க கிளர்ச்சிப் படைகள் ஆக்ரோஷமாக போரிட்டு வருகின்றன. குறிப்பாக டோன்ஸ்க் நகரின் விமான நிலையத்தை கைப்பற்ற கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே கிளர்ச்சிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், டோன்ஸ்க் நகர விமான நிலையத்தை கைப்பற்றிவிட்டோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை உக்ரைன் அரசு மறுத் துள்ளது.
விமான நிலையத்தின் ஒரு பகுதியில் ஊடுருவ கிளர்ச்சிப் படை வீரர்கள் முயற்சி செய்தனர். ராணுவத்தின் பதிலடியால் கிளர்ச்சிப் படை பின்னுக்குத் தள்ளப் பட்டுள்ளது என்று உக்ரைன் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.