புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தம் வேர்களை மறவா, ஈழத்தமிழர் மத்தியில் பிரித்தானியாவில் வாழும் திரு. சிவகுருநாதன் அவர்கள், தனது ‘Concern Srilanka Foundation’ எனும் அமைப்பின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகாலமாக, Londonல் கலைநிகழ்வுகளை ஏற்பாடுசெய்து அதன்மூலம் திரட்டப்படும் நிதியைக்கொண்டு தாயகத்தில் வாழும்மக்கள் மத்தியில் அவர்களது வறுமைநிலையைப் போக்கும் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்துவருகிறார். அவரது முயற்சிகளுக்கு, மக்கள் மத்தியில் பேராதரவு பெருகியிருப்பதை கடந்த நவம்பர் நான்காம் திகதியன்று London, Harrow, Zoroastrian Centre மண்டபத்தில் நடைபெற்ற ‘அபூர்வ ராகங்கள்’ நிகழ்ச்சியில், அரங்கு நிறைந்து வழிந்த மக்கள் மத்தியில் காணமுடிந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ‘Concern Srilanka Foundation’ ஏற்பாடுசெய்யும் கலை நிகழ்ச்சிகளும்கூட, பத்தோடுபதினொன்றாக இல்லாது வித்தியாசமாக அமையும். அந்தவகையில் இம்முறை ”கல்விக்குக் கைகொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் அமைந்த கலைநிகழ்ச்சிக்கு பிறவியிலேயே பார்வைப்புலனை இழந்திருந்தாலும் அபூர்வ இசையாற்றல் மிகு ‘காயத்ரி வீணைபுகழ்’ Vaikom விஜயலக்ஷ்மியையும், கர்னாடக இசைப்புலமையில் புகழ்பெற்ற ‘வெற்றிக்கொடிகட்டு பாடல் புகழ்’பாலக்காடு ஸ்ரீராமையும் சிறப்புக்கலைஞர்களாக அழைத்திருந்தமை மக்களது எதிர்பார்ப்புக்குப் பெரு விருந்தாகவே அமைந்தது என்று சொல்லவேண்டும். காரணம்? செப்டெம்பர் 9ம் திகதிஇ வெம்பிளி அரங்கில் நடைபெற்ற டி.இமானின் இசைநிகழ்ச்சியில் விஜயலக்ஷ்மியையை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இந்த அபூர்வராகங்கள் நிகழ்ச்சியில் முழுத் திருப்தியடையும் வகையில, ஒற்றைத்தந்தி கொண்ட ‘காயத்திரி வீணையைவாசிக்கும் ஒரேயொரு இசைக்கலைஞரான விஜயலக்ஷ்மி அவ் வீணையை மீட்டி ஜனரஞ்சகமான பாடல்களை இசைத்த அழகை அரங்கமே ஆவலோடு ரசித்து மகிழ்ந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அத்துடன் ஒருபாடகியாக, அவருக்கு முதல் அறிமுகத்தையும் மாநில அரசின் விருதினையும் வென்றுதந்த ‘காற்றே காற்றே….பாடலோடு ‘சொப்பணசுந்தரி.பாடலையும் மற்றும்பலபாடல்களையும் கணீரென்ற குரலில் பாடியதும் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. அதேவேளை பாலக்காடு ஸ்ரீராம் முதன்முறையாக பாடிக்கொண்டே இடையிசையில் புல்லாங்குழல் இசைத்த அபூர்வத் திறமையை எல்லோரும் வியந்துரசித்தார்கள். இந்நிகழ்வில் எல்லோரும் பாராட்டிய முக்கிய அம்சம், தென்னிந்தியக் கலைஞர்களோடு நமது ஈழத்துத் திறமைகளும் அரங்கேறக் களம் அமைத்தமையே. லண்டனில் வாழும் சுமார் எட்டு இளம் ஈழத்து இசைக்குயில்களுக்கு, தனித்தும் பாலக்காடு ஸ்ரீராமோடு இணைந்து பாடவும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டமை அவையோரின் அமோக பாரட்டைப் பெற்றது. சொப்பன சுந்தரி பாடலுக்கு துள்ளிசை நடனமாகவும் மின்சாரபூவே…. பாடலுக்கு பரதநாட்டிய முத்திரைகளோடும் லண்டன்வாழ் இளம் சிறார்கள் நடனமாடியது கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்தது.
தமிழகத்தின் முன்னணி இசைக்குழுவான ‘ஜீவராஜா ஸ்ருதி’இசைக்குழுவினர் இசைத் தட்டில் கேட்கும் அதே ஒலிநயத்தை மேடையில் பிரதிபலிக்கும் வகையில்வாசித்த திறன் பிரமிக்கவைத்தது. சிறப்புநிகழ்ச்சியாக நாற்பது ஆண்டுகளுக்குமேல் புகழ்பெற்ற ‘பாட்டுக்குப் பாட்டு’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஏழுவயதுச் சிறுமி முதல், எழுபதைக்கடந்த தாத்தா வரை ஆர்வத்துடன் பலர்கலந்துகொண்டார்கள். நகைச்சுவையும், இனிமையும் கலந்து எல்லோரையும்மகிழ்வித்த இந்நிகழ்ச்சியில் பாடிய, சிறுமி அநன்யாவின் துணிச்சலும் கணீர்க்குரலும். நினைவாற்றலும் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஒவ்வொரு அம்சத்தையும் அபூர்வமான பலதகவல்களுடன் எமது அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய பாங்கு மொத்த நிகழ்ச்சிக்கும் மகுடம் சூட்டியதுபோல் அமைந்தது என்றால் மிகையில்லை. மொத்தத்தில் குத்துப்பாடல்களும் விரசமான நடனங்களும் இல்லாத நிறைவான நிகழ்ச்சியாகவே“அபூர்வராகங்கள்-2017”அமைந்தது என்று நிச்சயமாகப் பாராட்டலாம். ‘Concern Srilanka Foundation’னின் நற்பணிகள் மேலும் தொடர வாழ்த்துவோம்.
-Harrow செய்தியாளர் –