கொழும்பு, சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுப்பர் லீக் முன் பருவ கால்பந்து தொடரில் தமது இறுதி மோதலில் கொழும்பு கால்பந்து கழகம், நியு யங்ஸ் கால்பந்து கழகத்தை 4-3 என வெற்றி கொள்ள, ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் 3-1 என டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை வெற்றி கொண்டது.
இதற்கு முன்னர் எந்தவொரு வெற்றியையும் சந்திக்காத நியூ யங்ஸ் அணி 2 வெற்றிகளை பெற்ற கொழும்பு கால்பந்து கழகத்துடன் மோதியது.
போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் கொழும்பு கால்பந்து கழக கோல் காப்பாளர் சாகிர் விட்ட தவறினால் கெலும் சன்ஞய நியு யங்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
இதற்கு பதில் கொடுக்கும் வகையில் அடுத்த 10 நிமிடங்களில் மொஹமட் ஆகிப் கொழும்பு அணிக்கான முதல் கோலைப் பெற்று போட்டியை சமப்படுத்தினார்.
எனினும், ரமேஷ் மெண்டிஸ் முதல் பாதி நிறைவடைவதற்குள் நியூ யங்ஸ் அணிக்கான அடுத்த கோலைப் பெற்று அணியை முன்னிலைப்படுத்தினார்.
இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது தரிந்து தனுஷ்க பந்தை நேராக கோலுக்குள் செலுத்தி நியூ யங்ஸ் அணிக்கான அடுத்த கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
எனினும், 2 கோல்கள் முன்னிலையில் இருந்த நியூ யங்ஸ் அணிக்கு எஞ்சிய நிமிடங்களில் போட்டியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாமல் போனது.
இறுதி 35 நிமிடங்களுக்குள் கொழும்பு அணி ஆகிப், மொமஸ் யாபோ மற்றும் சர்வான் ஜோஹர் ஆகியோர் மூலம் தொடர்ச்சியாக கோல்களைப் பெற, போட்டி முடிவில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் கொழும்பு காால்பந்து கழகம் தாம் விளையாடிய 4 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் இந்த சுப்பர் லீக் முன் பருவத்தை நிறைவு செய்துகொண்டது.
நியூ யங்ஸ் அணி இரண்டு போட்டிகளை சமநிலையில் நிறைவு செய்து, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் ப்ளூ ஸ்டார் வீரர்களுக்கு எதிராக டிபெண்டர்ஸ் வீரர்கள் இந்தப் போட்டியில் களமிறங்கினர்.
ஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் மதுஷான் டி சில்வா டிபெண்டர்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.
எனினும், 28 ஆவது நிமிடத்தில் கிடைத்த கோணர் உதையின் போது பசால் பந்தை சக வீரருக்கு வழங்கி, மீண்டும் தன்னிடம் பெற்று சிறந்த முறையில் பின்கள வீரர்களைக் கடந்து சென்று உள்ளனுப்பிய பந்து டிபெண்டர்ஸ் பின்கள வீரரின் கால்களில் பட்டு ஓன் கோலாக மாறியது.
அடுத்த சில நிமிடங்களில் மாற்று வீரராக வந்த செனால் சந்தேஷ் மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்று முன்னோக்கி எடுத்துச் சென்று ப்ளூ ஸ்டார் அணிக்கான அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.
இரண்டாம் பாதியின் ஆரம்பம் முதல் ப்ளூ ஸ்டார் வீரர்கள் தமது அட்டத்தின் வேகத்தை அதிகரித்தனர். இதன் பலனாக செனால் சந்தேஷ் வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின்மூலம் ரிசான் தமது அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
போட்டியின் இறுதி நிமிடங்களில் டிபெண்டர்ஸ் வீரர்கள் அடுத்த கோலுக்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை வெற்றியளிக்கவில்லை.
எனவே, 3-1 என்ற கோல்கள் கணக்கில் பெற்ற இந்த வெற்றியுடன் சுபர் லீக் முன் பருவத்தை ப்ளூ ஸ்டார் 3 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் நிறைவு செய்துகொண்டது.
டிபெண்டர்ஸ் வீரர்கள் தாம் விளையாடிய 3 பொட்டிகளில் 2 வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. டிபெண்டர்ஸ் மற்றும் ரினோன் அணிகளுக்கு இடையிலான ஒத்திவைக்கப்பட்ட முதல் வார மோதல் இன்னும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.