நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இன்றைய ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி, 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
ஆட்டநேர முடிவில் அசார் அலி 34 ஓட்டங்களுடனும் பவாட் அலாம் 21 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளையும் ட்ரென்ட் போல்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 373 ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தான் அணி 302 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
மவுண்ட் மவுன்கானுய் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸிற்காக 431 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கேன் வில்லியம்சன் 129 ஓட்டங்களையும் வட்லிங் 73 ஓட்டங்களையும் ரோஸ் டெய்லர் 70 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஷாயின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் யாசிர் ஷா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் அப்பாஸ், பஷீம் அஷ்ரப், நஷீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 239 ஓட்டங்களை பெற்றது. இதன்படி, பாகிஸ்தான் அணி, 192 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பஷீம் அஷ்ரப் 91 ஓட்டங்களையும் மொஹமட் ரிஸ்வான் 71 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமீசன் 3 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தீ, ட்ரென்ட் போல்ட், நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்னமும் 7 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் மீதமிருக்க, 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பாகிஸ்தான் அணி நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.