வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 8ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
ராய்பூர் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, புட்டிக் 39 ஓட்டங்களையும் டி பிரையன் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், குலசேகர, ஹேரத், ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டில்சான், தம்மிக்க பிரசாத் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 90 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 13.2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை ஜாம்பவான்கள் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இத்தொடரில் இலங்கை ஜாம்பவான்கள் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்றுள்ளது.
இலங்கை ஜாம்பவான்கள் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டில்சான் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களையும் உபுல் தரங்க ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தென்னாபிரிக்கா ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், கார்னட் க்ருகர் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 2 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான்கள் அணியின் ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டார்.