சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் லீக் போட்டிகள் இரண்டு சனிக்கிழமையும் (24), ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ளன.
இந்த வருடம் நிறைவடைந்த சிட்டி லீக் முதலாம் பிரிவு கால்பந்தாட்டத்தில் சம்பியனானதன் மூலம் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்துக்கு தரமுயர்த்தப்பட்ட மாளிகாவத்தை யூத் கழகம் முதல் தடவையாக தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் சனிக்கிழமை (24) விளையாடவுள்ளது.
சிட்டி லீக் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் மொரகஸ்முல்லை அணியை மாளிகாவத்தை யூத் அணி எதிர்த்தாடவுள்ளது.
இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (25) இதே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் நடப்பு சம்பியன் சோண்டர்ஸ் அணியை முன்னாள் சம்பியன் கலம்போ எவ்.சி. சந்திக்கவுள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்திருந்தன.
சோண்டர்ஸ் – ஜாவா லேன் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி 2 – 2 எனவும் கலம்போ எவ்.சி. – மொரகஸ்முல்லை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி 1 – 1 எனவும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
எனவே, சனிக்கிழமையும் (24), ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ள போட்டிகளில் விளையாடும் அணிகள் வெற்றிபெற்று முதலாவது வெற்றிப்புள்ளிகளைப் பெறுவதற்கு முயற்சிக்கவுள்ளன.
சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிக்கு சிட்டி லீக் தலைவர் ஆர். புவனேந்திரன் (புகழ்) பூரண அனுசரணை வழங்குகிறார்.
இந்த சுற்றுப் போட்டியில் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டநாயகன் தெரிவுசெய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
அத்துடன் சுற்றுப் போட்டியில் அதிசிறந்த கோல் காப்பாளர், அதிசிறந்த பின்கள வீரர், அதிசிறந்த மத்திய கள வீரர், அதிசிறந்த முன்கள வீரர் ஆகிய விருதுகள் வழங்கப்படுவதுடன், சம்பியன் அணிக்கு சிட்டி லீக் தலைவர் கிண்ணத்துடன் பணப் பரிசும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கும் பணப்பரிசு உண்டு.