செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர் லீக் இறுதி ஆட்டம்

வடக்கும் தெற்கும் மோதும் லங்கா பிறீமியர் லீக் இறுதி ஆட்டம்

2 minutes read

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தில் சம்பியனாகப் போகும் இறுதிப் போட்டியில் மூன்றாவது தடவையாக வடக்கு மற்றும் தெற்கு அணிகள் மோதவுள்ளன.

இந்த இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜெவ்னா கிங்ஸ அணியும் தென் மாகாணத்தின் காலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கோல் மார்வல்ஸ் அணியும் இந்த இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் வேவ்வெறு பெயர்களில் இதற்கு முன்னர் 2 தடவைகள் இறுதிப் போட்டியில் சந்தித்துக்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களில்   ஜெவ்னா வெற்றிபெற்று சம்பியனாகியிருந்தது.

முதலாவது அத்தியாயத்தில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் என்ற பெயரிலும் அந்த அணிக்கான உரிமைத்துவத்தை லைக்கா பெற்ற பின்னர்  இரண்டு தடவைகளும்   ஜெவ்னா கிங்ஸ் என்ற  பெயரிலும்    ஜெவ்னா சம்பியனாகியிருந்தது.

இப்போது தனது 4ஆவது இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள ஜெவ்னா (ஜெவ்னா கிங்ஸ்) நான்காவது சம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சிக்கவுள்ளது.

முதல் இரண்டு அத்தியாங்களில இரண்டாம் இடத்தைப் பெற்ற  கோல் க்ளடியேட்டர்ஸ் இம்முறை கோல் மார்வல்ஸ் என்ற புதிய பெயரில் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க கங்கணம் பூண்டுள்ளது.

ஜெவ்னா கிங்ஸ் சார்பாக அவிஷ்க பெர்னாண்டோ (374 ஓட்டங்கள்), பெத்தும் நிஸ்ஸன்க (333), ரைலி ரூசோவ் (283), குசல் மெண்டிஸ் (257) ஆகியோர் துடுப்பாட்டத்திலும், பேபியன் அலன் (10 விக்கெட்கள்), அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் (7), அவிஷ்க பெர்னாண்டோ (7), தப்ரெய்ஸ் ஷம்சி (6), ப்ரமோத் மதுஷான் (6) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

கோல் மார்வல்ஸ் சார்பாக டிம் சீபேர்ட் (353 ஓட்டங்கள்), அலெக்ஸ் ஹேல்ஸ் (320), நிரோஷன் டிக்வெல்ல (179), பானுக்க ராஜபக்ஷ (154) ஆகியோர் துடுப்பாட்டத்திலும் இசுறு உதான (14 விக்கெட்கள்), ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் (12), மஹீஷ் தீக்ஷன (10), ஸஹூர் கான் (9) ஆகியோர் பந்துவீச்சிலும் பிரகாசித்துள்ளனர்.

இந்த பெறுதிகளின் அடிப்படையில் ஜெவ்னா கிங்ஸ் பலம்வாய்ந்த அணியாகவும் சம்பியனாவதற்கு அனுகூலமான அணியாகவும் காணப்படுகிறது. ஆனால், கோல் மார்வல்ஸ் அணி சவால் விடுத்து விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லீக் சுற்றில் சந்தித்துக்கொண்ட இரண்டு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு அணிகளும் தலா ஒரு தடவை வெற்றிபெற்றிருந்தன.

முதலாவது தகுதிகாண் போட்டியில் ஜெவ்னா கிங்ஸை சந்தித்த கோல் மார்வல்ஸ் 7 விக்கெட்களால் வெற்றிபெற்று முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதனை அடுத்து இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கண்டி பெல்கன்ஸை ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட ஜெவ்னா கிங்ஸ் தகுதிபெற்றது.

வான்வெளியில் ட்ரோன் சாகசம்

ஜென்னா கிஸ்ஸுக்கும் கோல் மார்வல்ஸ் அணிக்கும் இடையில் நடைபெறும் இன்றைய இறுதிப் போட்டியில் முதலாவது அணி துடுப்பெடுத்தாடிய பின்னர் வழங்கப்படும் இடைவேளையின்போது அபூர்வ வான்வெளி சாகசக் காட்சி இடம்பெறவுள்ளது.

500 ட்ரோன்களைக் கொண்டு வண்ணமயமான வான்வெளி கண்காட்சி ஒன்று நடத்தப்படவுள்ளது.

இந்தக் கண்காட்சியின்போது இலங்கையின் உருவப் படம், தாமரைச் கோபுரம்,  லங்கா ப்றீமியர் லீக் லோகோ, அணிகளின் பெயர்கள், சின்னங்கள், துடுப்பாட்ட வீரின் உருவம், பந்துவீச்சாளரின் உருவம் என்பன ட்ரோன்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை வரலாற்றில் இத்தகைய கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More