இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், லண்டன், சாட்தம் ஹவுஸ் கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜெய் சங்கர் கலந்துகொண்டார்.
அப்போது அந்த கட்டிடத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். போராட்டம் காரணமாக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வெளியே வந்த ஜெய்சங்கர் காரில் ஏறினார். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
திடீரென்று நபர் ஒருவர், ஜெய்சங்கரின் காரை நோக்கி ஓடினார். அவர் தனது கையில் இந்திய தேசியக்கொடியை வைத்திருந்தார். கார் முன்பு ஆவேசமாக கோஷமிட்டப்படி, தேசியக் கொடியை கிழித்தார். உடனே அந்த நபரை பொலிஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜெய்சங்கர் காரில் புறப்பட்டுச் சென்றார்.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.