13 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, தமிழகம் திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) நாடு திரும்பியது.
இதன்போது, சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், இந்த சுற்றுப் பயணம் குறித்து, ஊடகவியலாளர்கள் கேள்விகளை தொடுத்தனர். இதன்போது கருத்து தெரிவித்த அவர், “3 வெளிநாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் மூலம் தமிழகத்திற்கு 8835 கோடி ரூபாய் தொழில் முதலீடுகள் கிடைக்க உள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக மொத்தம் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 35,520இற்க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
தமிழக முதலமைச்சர்கள் வெளிநாடு செல்வதில்லை என்கிற குறையை நாம் போக்கிவிட்டோம். தனது வெளிநாட்டுப் பயணம் தொடரும். அடுத்ததாக நீர் சிக்கனம் பற்றிய தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்வதற்காக இஸ்ரேல் செல்ல உள்ளோம்” என கூறினார்.
மேலும், தனது வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளதற்கு பதிலளித்து பேசிய முதல்வர், தம் மீது உள்ள பொறாமையால், மு.க.ஸ்டாலின் அவ்வாறு விமர்சிப்பதாகக் கூறினார். தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு தொழில் அதிபர்களை சந்திக்கும்போது, அவர்கள் உடையில் சென்றால்தான் மரியாதையாக இருக்கும். அதனால்தான் வெளிநாட்டு பயணத்தின்போது கோட், அணிந்ததாக கூறினார்.