நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என கோசமிட்டவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே அரசியலுக்குவாங்கரஜினி என்ற வார்த்தை ருவிட்டரில் வைரலாகி வருகிறது.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் சிலர் ரஜினியின் இந்த முடிவை வரவேற்றுள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் கீழ்மட்ட பொறுப்பில் இருப்பவர்களும் ரசிகர்களும் ரஜினிகாந்த் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனையடுத்து ரஜினி ரசிகர்கள், தங்களது பலத்தை காட்டும் வகையில் ஓரிடத்தில் கூடி ரஜினியை அரசியலுக்கு இழுப்பதற்காக முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகளில், ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
எனினும் ரஜினி ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி இன்று நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸ் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.