உலகம் முழுக்க 17 நாடுகளில் இந்த நிறுவனம் லைகா மொபைல் என்ற செல்போன் சேவை இணைப்பு வழங்கி வரும் இங்கிலாந்தில் வாழும் இலங்கை தொழில் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா மீது பண பரிவர்த்தனையில் முறைகேடுகள் புகார் வழங்கப்பட்டதை அடுத்து இந்திய மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருந்தனர். அப்போது லைகா பட நிறுவனத்தின் பண பரிவர்த்தனைகளில் உரிய கணக்கு இல்லை என்று அதிகாரிகள் கருதியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைகா பட நிறுவன அலுவலகங்களில் இன்று (16.05.2023) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் தி.நகர், அடையார், காரப்பாக்கம் உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் 10 அதிகாரிகள் குழு சோதனையை மேற்கொண்டது. பட தயாரிப்புக்கு செலவிட்ட தொகை, முதலீடு செய்த தொகை போன்றவை தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சில ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய முழுமையான தகவல்கள் அமலாக்கத்துறை சார்பில் இன்று மதியம் வரை வெளியிடப்படவில்லை.
லைகா மொபைல் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இயங்கி வரும் லைகா பட நிறுவனம் இதுவரை இந்தியாவில் சுமார் 20 படங்களை தயாரித்து உள்ளது.