இமாசல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடும் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு மோசமான பாதிப்புகளையும் எதிர்கொண்டு உள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இமாசலபிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு பேய்மழை கொட்டி வருகிறது.
இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
திங்கட்கிழமை பெய்த கனமழையால் தலைநகர் சிம்லாவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சம்மர்ஹில் பகுதியில் உள்ள ஒரு சிவன் கோவில் இடிந்து விழுந்தது.
அதே போல் பாக்லி பகுதியில் பல வீடுகள் மண்ணோடு புதைந்தன. மாநிலம் முழுவதும் 3 நாட்களில் 60-க்கும் மேற்பட்டவர்கள் மழை பாதிப்புக்கு பலியானார்கள்.
இந்த நிலையில் நேற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து வருகிறது. மழைக்கு இடையில் மீட்பு பணிகளும் நடந்து வருகின்றன. இதற்கிடையே நேற்று பகல் வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்ந்து 72 ஆனது.