கிழக்கு மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்க்க இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் நேற்று (வியாழக்கிழமை) பின் தங்கிய கிராமிய அபிவிருத்தி, மனைசார் கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை கொழும்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டதாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கலந்துரையாடலின்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும், கிழக்கு மாகாண மக்களுக்கு இருக்கின்ற விசேடமான பல்வேறுபட்ட அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகள் அதிலும் குறிப்பாக வீட்டுத்திட்டம், குடிநீர் பிரச்சினை மற்றும் மலசல கூடங்கள் உட்பட வாழ்வாதார கட்டமைப்புக்களை ஏற்படுத்துதல் போன்றவை தொடர்பாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்போது இராஜாங்க அமைச்சரின் கோரிக்கைகளை செவிமடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர், கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் தமிழ் மக்களுக்கான பல்வேறுபட்ட திட்டங்களை முன்னெடுப்பதில் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததாக இராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய துனை உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட மேலும் பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.