பிறநபர்களின் வங்கி கணக்குகளில் அத்துமீறி பிரவேசித்து பணமோசடியில் ஈடுபட்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
வவுனியா பகுதியில் கறுப்புபண சுத்திகரிப்பு சட்டவிதிகளின் கீழ் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிற நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அத்துமீறி பிரவேசித்து பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே , குற்றப் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபரான இளைஞரை கைது செய்துள்ளனர்.
வவுனியா – வேப்பகுளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தனியார் வங்கி கணக்கு இலக்கத்திற்கு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ஒரு கோடியே இரண்டு இலட்சத்து 58 ஆயிரத்து 399 ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாலய்வு பிரிவினர் , சந்தேக நபரான இளைஞன் ஏனைய நபர்களின் வங்கி கணக்குகளுக்கு அத்து மீறி பிரவேசித்தே , இந்த பணத்தொகையை பெற்றுக் கொண்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் , கடந்த காலங்களில் இது போன்ற மோசடி செயற்பாடுகளில் ஈடுபட்டதாக 36 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.