“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதான் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார், எனவே, அவரை சில அரசியல்வாதிகள் கிழட்டு மைனா என விமர்சித்தாலும் மக்கள் மத்தியில் அவருக்கான செல்வாக்கு – மதிப்பு குறையவே இல்லை.”
– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-
“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிரணியில் உள்ளது என அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறினாலும், அவரின் உறுப்பினர்கள் அமைச்சர்களாக உள்ளனர். இதன்மூலம் அவர்களின் இரட்டைக்கொள்கை அரசியல் தெளிவாகின்றது.
மஹிந்த ராஜபக்சவுடன் இணையப்போவதில்லை எனவும் மைத்திரி கருத்து வெளியிட்டுள்ளார். மஹிந்தவுடன் இணைந்து போட்டியிட்டதால்தான் அவருக்கு நாடாளுமன்றம் வரமுடிந்தது என்பதை மறந்துவிட்டார் போலும்.
மஹிந்த ராஜபக்ச இந்நாட்டுக்காகப் பொறுப்புகளை நிறைவேற்றிய தலைவர். 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்தார். பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தார். இப்படியானவர் எமது கட்சி தலைவராக இருப்பது பெருமை அளிக்கின்றது.
மஹிந்தவுக்கான மதிப்பு மக்கள் மத்தியில் உள்ளது. அதனை எவரும் ஒளிக்க முடியாது. மைனா, திருடன் என ஜே.வி.பி. காரர்கள் விமர்சித்தாலும், நாட்டை மீட்டது யார் என்பது மக்களுக்குத் தெரியும்.” – என்றார்.