செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித்தால் வெல்லவே முடியாது! – ரணில் தெரிவிப்பு

சஜித்தால் வெல்லவே முடியாது! – ரணில் தெரிவிப்பு

3 minutes read

“இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற முடியாது. சஜித் இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார். நல்லாட்சி அரசு இருந்த காலத்தில் கூட அநுரகுமார அந்த அரசுடன் இணைந்தே செயற்பட்டார். ஆனால், இன்று சஜித்தை அநுர மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவுக்குச் சாதமாக அமைந்துள்ளன.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மஹியங்கனை பொது விளையாட்டரங்கில் இன்று (04) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“இன்று தபால் வாக்களிப்புக்கள் ஆரம்பித்துள்ளன. நல்ல செய்தி கிடைத்திருக்கின்றது. இரு வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு தேர்தலை நடத்தும் வாய்ப்பு இருக்கவில்லை. சிலர் நாடாளுமன்றத்தை முடக்க வந்தனர். அதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினோம்.

மருந்து, எரிபொருள்,எரிவாயு வரிசைகள் இருந்தன. எவருமே ஏற்க இயலாது என்று சொன்னபோது, ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று சொல்லி நாங்கள் பணிகளை ஆரம்பித்தோம். இன்று நல்ல நிலைத்தன்மை கிட்டியுள்ளது. அன்று தட்டுப்பாடாக இருந்த பொருட்கள் இன்று கிடைக்கின்றன. பொருட்களின் விலையும் குறைந்து வருகின்றன.

நாட்டில் புதிய பொருளாதாரத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. மக்கள் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன். பொருட்களின் விலைகளை இன்னும் குறைக்க வேண்டும். இதனைச் செய்யவே தேர்தலை நடத்துகின்றோம். இந்தத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். நாம் எந்த வழியில் செல்லப் போகின்றோம் என்பதைத் தீர்மானிக்கலாம்.

இந்த நாட்டில் நாம் ஆரம்பித்த பயணம் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். மக்களுக்குக் கஷ்டம் இருப்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஒரே அடியில் சரிந்த பொருளாதாரத்தை மீட்க முடியாது. சர்வதேசத்தின் உதவி எமக்கு இருக்கின்றது.

அதனைக் கொண்டு வாழ்க்கைச் சுமையை குறைக்கவும், தொழில் வாய்ப்புக்களை பலப்படுத்தவும், வரி சுமையைக் குறைக்கவும், ‘உறுமய’, ‘அஸ்வெசும’ போன்ற மக்களுக்கான நிவாரணத் திட்டங்களைப் பாதுகாக்க வேண்டும்.

நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் அடியாக குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்கினோம். இன்னும் அதிகமானவர்களுக்கு அந்த நிவாரணம் கிடைக்கும். விவசாயிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவே அதனை செய்தோம்.

பின்னர் விவசாயிகளுக்கான உரத்தைப் பெற்றுக்கொடுத்து நல்ல விளைச்சலை கோரினோம். விவசாயிகள் தந்த ஆதரவினால் நாட்டை முன்னேற்ற முடிந்தது. இனிவரும் நாட்களில் வரிச்சுமையைக் குறைப்போம். விவசாய துறையை மேலும் பலப்படுத்துவோம். மக்களுக்கு காணி உறுதிகளைப் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகளையும் தொடர்வோம்.

இங்கு மாதுறுஓய போன்ற திட்டங்களை ஆரம்பித்த காலத்தில் மக்களுக்குக் காணி உறுதிகள் கிடைக்கவில்லை. சுமார் 85 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்கு காணி உறுதிகள் கிடைத்திருக்கவில்லை. அதனாலேயே தற்போது மக்களுக்கான உரிமைகளை வழங்குகின்றேன். இனிவரும் காலங்களில் விவசாய நவீனமயமாக்கல் பணிகளையும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். அதனால் எதிர்காலத்தில் உலகின் பெருமளவானோரின் உணவுத் தேவையை நாம் பூர்த்தி செய்ய முடியும்.

எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளை அதிகபடுத்தினால் யார் முன்னேறப் போகின்றார்கள்? இன்று வீட்டில் போய் கண்ணாடியைப் பாருங்கள். யார் முன்னேறுவர் என்பது தெரியும். மற்றைய கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிவாரணங்கள் மக்கள் வறுமையைத் தக்க வைப்பதாக அமையும். ஆனால், நாம் மக்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுச் செல்வதற்காக திட்டங்களைக் குறிப்பிட்டிருக்கின்றோம்.

தேயிலையைப் போன்றே மற்றைய விளைச்சல்களையும் ஏற்றுமதியை இலக்கு வைத்து மேற்கொள்ள வேண்டும். எனவே, பழைய வாத்திம் வாசிப்பவர்களை விட்டு விடுங்கள். அடுத்த வருடத்திலிருந்து நாம் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவோம். ஸ்மார்ட் விவசாயம் செய்யவும் நிவாரணங்களை வழங்குவோம். மேலும் ஐம்பதாயிரம் பேருக்கு வௌிநாட்டு தொழில்களுக்கான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள 50 ரூபாய் கொடுப்பனவையும் வழங்குவோம்.

இளையோருக்கு எவ்வாறான தொழில் வாய்ப்புக்களை வழங்கப் போகின்றார்கள் என்பது பற்றி மற்றைய கட்சிகள் கூறவில்லை. அதற்காக அவர்களிடம் நல்ல திட்டம் இருப்பதை காட்டினால் அவர்களுக்குப் பரிசு கொடுப்பேன்.

இன்று இந்தக் கூட்டம் நடக்கும் மஹியங்கனை ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி ஆசனமாகும். இன்றைய நிலையில் சஜித் பிரேமதாஸவால் அநுரகுமார திஸாநாயக்கவைத் தோற்கடிக்க முடியாது. இலங்கையில் ஒவ்வொரு முறையில் ஜனாதிபதித் தேர்தல்களின் போது இது வேட்பாளர்களுக்கு மட்டுமே முக்கிய இடமிருக்கும். நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும், மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் மற்றுமொரு எதிர்க்கட்சிக்கு நாங்கள் இடமளிக்கவில்லை.

அந்தவகையில் சஜித் பிரேமதாஸ இப்போதே தோற்றுப் போயுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் காலத்தில் அவரை மிஞ்சிய வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க இருக்கின்றார். நல்லாட்சி அரசு இருந்த காலத்தில் கூட அநுரகுமார அந்த அரசுடன் இணைந்தே செயற்பட்டார். ஆனால், இன்று அநுர சஜித்தை மிஞ்சி வந்துள்ளார். சஜித் செய்யும் சில முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவுக்குச் சாதமாக அமைந்துள்ளன. எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை முன்னோக்கி கொண்டு வந்த தலைவர்களின் பணியை இன்று நானே ஆற்றுகின்றேன் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது. உங்கள் விவசாயமும் பாதுகாக்கப்படாது.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More