செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழரசுக்கட்சியில் 28பேருக்கு எதிராக இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கை

தமிழரசுக்கட்சியில் 28பேருக்கு எதிராக இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கை

1 minutes read

இலங்கைத் தமிழரசுக்கட்சியில் மட்டக்களப்பு, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 28பேருக்கு எதிராக இதுவரையில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை என்று அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தின் தீர்மானத்துக்கு அமைவாக, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் கடந்த ஜனாதிபதி, மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின்போது செயற்பட்டவர்கள் தொடர்பில் மாவட்ட ரீதியாக ஆதராங்களுடன் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த நடவடிக்கைகள் குறித்து கட்சியின் பதில் பொதுச்செயலாளர் தெரிவிக்கையில்,

வவுனியாவிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டங்களின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, வைத்தியர் சிவமோகன் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

பா.அரியநேத்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கே.வி.தவராசா, மிதிலைச்செல்வி ஆகியோர் கட்சியிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், மாவட்ட கிளைகளின் ஊடாக அவ்விதமாக செயற்பட்டவர்கள் தொடர்பில் வர்த்தமானி உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்தவகையில், தற்போது வரையில்  மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14பேருக்கு எதிராகவும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 12பேருக்கு எதிராகவும், வவுனியா மாவட்டத்தினைச் சேர்ந்த இருவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களிடத்தில் விளக்கமளிப்புக்கான எழுத்துமூலமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களின் பட்டியல்கள் இன்னமும் கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் அதுகுறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More