சமூக செயற்பாட்டாளர் டான் ப்ரியசாத் என அழைக்கப்படும் அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்ய வேண்டாம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் டான் ப்ரியசாத்துக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு தொடர்பில் டான் ப்ரியசாத்துக்கு எதிராக நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டான் ப்ரியசாத் கடந்த 11 ஆம் திகதி துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத் தந்திருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.