ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு, October மாதம் 7ம் திகதி தொடங்கிய யுத்தம் தொடர்ந்து 19வது வருடமாக நீடிக்கிறது. இதற்கு முடித்துக் கொள்ள விரும்பி தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையை நடத்தியது.
இதன் பலனாக கடந்த 29ம் திகதியன்று, கட்டாரின் தலைநகரான டோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க தூதுவரும், தலீபான் துணைத்தலைவரும் இவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில், தலீபான்கள் தங்கள் சிறையிலுள்ள 1,000 ஆப்கானிஸ்தான் ரானுவ வீரர்களை விடுவிக்க வேண்டும், இதே போன்று ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தனது சிறையிலிருக்கிற 5,000 தலீபான்களை விடுவிக்க வேண்டும்.
ஆனால் இதுபற்றி பேச்சுவார்த்தையின்போதுதான் பேச வேண்டுமே தவிர, இப்போது தலீபான்களை விடுவிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கண்டிப்புடன் கூறி விட்டார். அது மட்டுமின்றி, பேச்சு வார்த்தைக்கு இதை ஒரு நிபந்தனையாக கூட வைக்க கூடாது என்று கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி தலீபான்களின் துணைத்தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி மூலமாக பேசினார்.
35 நிமிடம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையின்போது அவர், ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால்தான் டோஹாவில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது, எனவே அங்கு வன்முறை கூடாது என வலியுறுத்தினார்.
அமைதி ஒப்பந்தத்தை பின்பற்றும் நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்க தயாராக இருப்பதாகவும் அமெரிக்கா ஜனாதிபதி அவரிடம் கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசுடனும், மக்களுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் தலீபான்கள் பங்கேற்பது அவசியம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தகவல்களை வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, அங்கு அமெரிக்கா ஜனாதிபதி நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவர், ‘‘தலீபான் தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்தது’’ என கூறினார்.