இலங்கையில் மக்களிடையே அரசுக்கு செல்வாக்கு குறைந்து வருவதால் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த ராஜபக்சே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் கடந்த 2005–ம் ஆண்டு ராஜபக்சே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் விளைவாக 2009–ல் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டனர்.
இதனால் சிங்கள மக்களிடையே ராஜபக்சேவின் செல்வாக்கு உயர்ந்தது. இதை பயன்படுத்திக்கொண்ட அவர் 2010–ம் ஆண்டு அதிபர் தேர்தலை நடத்தி, மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், ராஜபக்சேவின் பதவிக்காலம் 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளது.
இந்த நிலையில் அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ராஜபக்சே குடும்பம் பெரும் பங்காற்றி வருவதாக புகார் கூறப்பட்டது.
ஆளும் கட்சி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், ராஜபக்சே தனது உறவினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குவதாகவும் நாட்டு மக்களிடையே பரவலாக குற்றச்சாட்டுகள் எழத்தொடங்கி உள்ளன. இந்த புகார்கள் ராஜபக்சேவின் பின்னடைவுக்கு அடித்தளமிட்டுள்ளன.
இது கடந்த மாதம் நடந்த உவா மாகாண தேர்தலில் எதிரொலித்தது. அங்கு ராஜபக்சேவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி வெற்றி பெற்றாலும், அந்த கட்சிக்கு கடந்த 2009–ம் ஆண்டை விட 21 சதவீத வாக்குகள் குறைவாகவே கிடைத்தன.
இலங்கையில் 3–வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் ராஜபக்சேவுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே தனது செல்வாக்கு குறைந்து வருவதால் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.