Friday, September 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும் இருவருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா?

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் மேலும் இருவருடங்களுக்குக் காலநீடிப்பு செய்யப்படுமா?

1 minutes read

இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புக்களில் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தக்கூடியவகையில் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆக கால நீடிப்புச்செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் முடிவுடையவுள்ள நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் பேரவையில் வாக்கெடுப்பின்றி காலநீடிப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடமேறும் புதிய அரசாங்கம் இதற்கு உடன்படாவிடின், இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வதற்கு வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More