மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து தேசபந்து தென்னக்கோன் தலைமறைவானார். அவரைக் கைது செய்வதற்குப் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை இடம்பெற்று வந்தது.
இதற்கிடையில் தன்னைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி தேசபந்து தென்னக்கோன் சார்பில், அவரது சட்டத்தரணியால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேசபந்து தென்னக்கோன் இன்று காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.