இந்த வாரம் உலகை அமைதியில் ஆழ்த்திய சம்பவம், ஒரு தலைவரின் மறைவுக்காக உலகின் அத்தனை மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர். தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் அவலநிலையை மாற்றிய பெருந்தலைவன். குக்கிராமத்தில் தோன்றிய ஒரு போராளி பெருந்தலைவரான வரலாறு. அத்தனையும் ஒருவரால்தான் முடிந்துள்ளது. அவர்தான் நெல்சன் மண்டேலா. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் விடுதலைக்கான போராளி எனும் குறிகாட்டி.
1918 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பிறந்த நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியிரசுத் தலைவராவார். தென்னாபிரிக்காவில் புரட்சியை ஏற்படுத்திய பெருமையுடன் நிறவெறிக்கு எதிராக போராடியமையால் உலகம் போற்றும் தலைவராகவும் இவர் திகழ்ந்தார்.
இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது.
உலக சமாதானத்துக்காக மண்டேலா ஆற்றிய சேவைகளைப் பாராட்டி அவர் சிறையில் இருக்கும்போதே இந்திய அரசு “நேரு சமாதான விருது” வழங்கியது. கணவர் சார்பில் வின்னி டெல்லிக்கு வந்து அந்த விருதைப் பெற்றார்.
1990-ல் இந்தியாவின் ‘பாரத ரத்னா’ விருதும் வழங்கப்பட்டது. 1993இல் உலக அமைதிக்கான நோபல் பரிசும் இவருக்கு வழங்கப்பட்டது. அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது.
தனது பிறப்பின் முழுமையை உணர்ந்த இந்த மக்கள் தலைவன் தனது இறப்பினையும் முன்கூட்டி 1996ம் ஆண்டே குறிப்பிடிருந்தார்; “மரணம் தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் சமூகத்துக்கும் நாட்டுக்கும் தன் கடமையை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் மரணத்தில் அமைதியடைகிறான். நான் அதற்காக முயற்சியெடுத்து கடமையை செய்திருக்கிறேன் என நம்புகிறேன். ஆதலால் நான் நித்திய உறக்கத்துக்குத் தயாராக இருக்கிறேன்” எனக் கூறியிருந்தமை இன்று நினைவுகொள்ளத் தக்கது.