புருண்டியின் தலைநகரில் அடை மழை காரணமாக இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி ஒரு நாளில் குறைந்தது 60 பேர் பலியாகியுள்ளதுடன் 81 பேர் காயமடைந்துள்ளனர்
இந்த வெள்ளத்தால் 400க்கு மேற்பட்ட வீடுகள் அழிவடைந்துள்ளதாகவும் பலியானவர்களில் அநேகமானவர்கள் சிறுவர்கள் எனவும் புருண்டியிலுள்ள செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இந்த வெள்ளம் மற்றும் மணிசரிவால் தலைநகருக்கு அருகிலுள்ள ஏனைய 3 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இது புருண்டியின் தலைநகர் புஜூம்புராவின் வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது மாபெரும் இயற்கை அனர்த்தமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த இயற்கை அனர்த்தத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிஸிகமாவும் ஏனைய அமைச்சர்களும் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.
வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகளை வழங்கவும் வெள்ளத்தில் சிக்கி இருந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு தேவையான பணத்தை அவர்களது உறவினர்களுக்கு வழங்கவும் உறுதியளித்துள்ளார்.