பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் வடக்கில் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மேலும் இதனை கட்டுப்படுத்துமாறுக் கோரி பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்தினவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்டு வரும் கிராமிய அமைப்புக்களான மாதர் சங்கங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கங்களுடான கலந்துரையாடல் இன்று (புதன்கிழமை) யாழ். பொது நுலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போத அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், “வடக்கில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறிப்பாக சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் பேதைப்பொருள் பாவனைகள் தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன.
இதனை கட்டுப்படுத்துவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும் இவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.
இதனைக் கருத்திற்கொண்டு பாதுகாப்பு செயலாளருக்கு எனது இணைப்பு செயலாளரூடாக கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினூடாகவும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன். எது எவ்வாறு இருப்பினும் இதனை முற்றாக தடைசெய்வதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.
கிராமங்களில் உள்ள கிராமிய பொது அமைப்புக்கள் இவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடிக்க வேண்டும். சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றது எனத் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவியுங்கள். அதிலும் நம்பிக்கையில்லை என்றால் கிராமிய திணைக்களங்களினூடாக எமக்கு அறிவியுங்கள்” எனத் தெரிவித்தார் .