செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

புறப்பாடு | கவிதை | வ. அதியமான்

1 minutes read

தன் மடியெழுந்து
பறந்துவிட்ட
சிறு குருவியை
தொட்டுத் தொடர
சிறகு விரிக்க தயாராகிறது
அந்த கரும்பாறை

இன்னும்
ஏன் இந்த சிறகுகள்
விரியவில்லை?
திகைத்துக் கொதிக்கிறது
இல்லாத சிறகுகளை
விரிக்கத் துடிக்கிறது

எப்போதும் அதற்குச்
சிறகுகள் ஏதும்
வேண்டியதில்லை
இப்போது
பட்டுக் குருவியை
தொட்டுத் தொடர
பறந்தாக வேண்டும்
பறப்பதற்கு சிறகு வேண்டும்
அவ்வளவே

தன்னுள்
எரிந்தெழுந்த
ஏதோ ஒன்று
இளகி உருகுவதைத்
தானறியாது
பறந்துபோன குருவியின்
திசையை வெறித்து
விழிநீர் மல்க குமைகிறது

கனிந்த கரும்பாறை
கரைந்துருகிய விழிநீர்
தரை தொடும் முன்னமே
தன்னில் முளைத்துவிட்ட
சிறகினை
வியப்பில்லாது விரித்து
வானில் எழுகிறது
நூறு நூறு குருவிகளாய்

நன்றி : வ. அதியமான் | சொல்வனம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More