இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் மற்றொரு நீர்மூழ்கி கப்பல் இலங்கை வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த செப்டம்பர் மாதம் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் அதை புறந்தள்ளி கொழும்பு துறைமுகத்தில் அக்கப்பல் நுழைய இலங்கை அனுமதி அளித்தது. மகிந்தா ராஜபக்சேவின் சகோதரரான கொத்தாபய ராஜபக்சேவிடம் இது தொடர்பாக இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது மீண்டும் அடுத்த சில நாட்களில் சீன நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வர இலங்கை அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
பாக் ஜல சந்தி பகுதியில் சீன நீர்மூழ்கி கப்பல் காணப்படுவது பதட்டத்தை உருவாக்கும் என்றும் இந்தியா எச்சரித்திருந்த நிலையில் தொடர்ந்து இந்தியாவை இழிவுபடுத்தும் வகையிலேயே இலங்கை இவ்வாறு செய்லபடுவதாக கருதப்படுகிறது. வியட்நாம் பிரதமர் நுகுயென் டான் டங் இந்தியா வந்து சென்ற பின்பு, சீனா தனது நீர்மூழ்கி கப்பலை இரண்டாவது முறையாக இலங்கைக்குள் அனுப்ப உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவின் நீர்மூழ்கி கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என இந்தியா தனது கடும் எதிர்ப்பை இம்முறை தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.