அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.
2014–ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன் என்ற கறுப்பின வாலிபர் போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த நகரில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் வாக்கெடுப்பில், சில தினங்களுக்கு பிரதமர் மோடி முதல் இடத்தில் இருந்தார். ஆனால் 4 தினங்களுக்கு முன், பெர்கூசன் போராட்ட குழு, அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. இதனால் பிரதமர் மோடி 2–வது இடத்துக்கு வந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் அந்த போராட்ட குழுவை பின்னுக்கு தள்ளிவிட்டு மொத்த வாக்குகளில் 12.8 சதவீத வாக்குகள் பெற்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் மீண்டும் முதல் இடத்தை பிடித்தார். பெர்கூசன் போராட்ட குழு 10.1 சதவீத வாக்குகளுடன் 2–வது இடத்தில் உள்ளது. ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்காக போராடி வரும் இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஜோசுவா வோங் 7.5 சதவீத வாக்குகளுடன் 3–வது இடத்திலும், பாகிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து பெண் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் 5.2 சதவீத வாக்குகளுடன் 4–வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழு 4.5 சதவீத வாக்குகளுடன் 5–வது இடத்தில் உள்ளது. ரஷிய அதிபர் புதின் 4.1 சதவீத வாக்குகளுடன் 6–வது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 2.3 சதவீத வாக்குகளுடன் 11–வது இடத்திலும் உள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு நாளையுடன் (சனிக்கிழமை) முடிவடைகிறது. இந்த ஆண்டின் சிறந்த மனிதர் யார் என்பதை டைம்ஸ் பத்திரிகை 10–ந் தேதி தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறது.