அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான இரண்டாவது வோர்ன் – முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது திமுத் கருணாரட்னவின் 100ஆவது போட்டியாகும். அத்துடன் இப் போட்டி அவரது பிரியாவிடை போட்டியாகவும் அமைகிறது.
இதனை முன்னிட்டு அவருக்கு 100ஆவது டெஸ்ட் போட்டியைக் குறிக்கும் தொப்பியை இலங்கை அணியின் பயிற்றுநரும் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அணிவித்தார்.
அத்துடன் திமுத் கருணாரட்னவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஜயன்த தர்மதாச வழங்கினார்.
இந்த வைபவத்தில் இலங்கை அணி வீரர்கள், அவுஸ்திரேலிய அணி வீரர்கள், திமுத் கருணாரட்னவின் பெற்றோர், குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்ன ஆடுகளம் நுழைந்தபோது இளம் கிரிக்கெட் வீரர்கள் இருமருங்கிலும் துடுப்புகளை உயர்த்தி அவருக்கு கௌரவம் செலுத்தினர்.
ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலியா அணியினரும் கரகோஷம் செய்து திமுத் கருணாரட்னவை வாழ்த்தினர்.