ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani) கொல்லப்பட்டதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மட்டுமல்ல, அமெரிக்க அரசாங்கத்தையும் ஈரான் குற்றம் சாட்டுகிறது.
கடந்த ஜனவரி 3ஆம் திகதி பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூத்த ஈரான், ஈராக் அதிகாரிகளின் கார்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாக அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
இதில், ஈரான் உயர்மட்டத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ மற்றும் ஈராக்கின் ஹஷீத் அல்-ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்திஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 8 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் ஆவர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் படி, ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களைப் பாதுகாக்கும் விதமான தற்காப்பு நடவடிக்கையாக இவர்கள் குறிவைக்கப்பட்டதாக பின்னர் அமெரிக்க இராணுவம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் காஸ்ஸெம் சோலேமானீ கொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் மூத்த அதிகாரிகள் 30பேர் மீது ஈரான் வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) வெளிநாட்டு நடவடிக்கைக் குழுவுக்கு தலைமை தாங்கிய, ஈரானில் இரண்டாவது மிக சக்திவாய்ந்த மனிதர் என்று கருதப்படும் காஸ்ஸெம் சோலேமானீ கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசாங்கத்தையும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரானிய அதிகாரி சயீத் காதிப்சாதே கூறுகையில், ‘மேஜர் ஜெனரல் காஸ்ஸெம் சோலேமானீ மற்றொரு நாட்டில் கோழைத்தனமான, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா பொறுப்பு.
தேசிய அளவில், அமெரிக்க அரசாங்கமே இதற்கு பதிலளிக்க வேண்டும். ட்ரம்ப் என்ற நபரை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அமெரிக்க ஜனாதிபதியை நாங்கள் அங்கீகரிக்கிறோம்
ட்ரம்ப் உலகளாவிய சமூகத்திற்கும் அவரது சொந்த நாட்டிற்கும் தன்னிடம் என்ன குணாதிசயங்கள் உள்ளன என்பதை நிரூபித்துள்ளார்’ என கூறினார்.
காஸ்ஸெம் சோலேமானீ கொலை செய்யப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க தளங்களில் ஈரான் ஒரு டசன் ஏவுகணைகளை வீசியது. இதனால் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சிகரமான மூளைக் காயங்களுக்கு உள்ளாகினர்.