இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, இங்கிலாந்து 21 வயது யுவதி ஒருவர், இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு லண்டனின் கூல்ஸ்டனைச் சேர்ந்த சார்லோட் மே லீ என்ற யுவதியே, பெங்காக்கிலிருந்து விமானத்தில் வந்த பின்னர் இன்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
46 கிலோ (101 பவுண்டுகள்) கஞ்சா வகை குஷ் அடங்கிய இரண்டு போதைப்பொருள் பொதிகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்றதாக இலங்கை அதிகாரிகளால், யுவதி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த யுவதிக்கு துணை நிற்பதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், யுவதி தனது குடும்பத்தினருடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக இங்கிலாந்து வெளியுறவு, கொமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லோட் மே லீ, TUI-யின் முன்னாள் கேபின் குழு உறுப்பினராக பணியாற்றிய நிலையில், பின்னர் அழகுக்கலை நிபுணராகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.