கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, மலேசியாவில் பதிவுச் செய்யாமல் தங்கியிருக்கும் குடியேறிகளை சுற்றிவளைத்து வருவதாக மலேசிய காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இவர் குறிப்பிட்டது போல, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி, மே 1ம் தேதி நடந்த தேடுதல் நடவடிக்கையில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
பொது நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், முறையாக பதிவுச்செய்யாத புலம்பெயர்ந்தவர்கள் வேறு இடங்களுக்கு பயணிப்பதைத் தடுக்கும் விதமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமித் படோர் தெரிவித்துள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு, பொது நடமாட்டக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரை கண்காணிப்பில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ரோஹிங்கியா அகதிகள், பதிவுச் செய்யாமல் உள்ள குடியேறிகள் கொரோனா பரவலுக்கு காரணமாக இருப்பதாகவும் அவர்கள் மலேசியாவுக்கு சுமையாக இருப்பதாகவும் கருத்துகள் எழுந்த நிலையில், இக்கைதுகள் நடந்துள்ளன.
மலேசியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முறையாக பதிவுச் செய்திருக்கும் நிலையில்,ஆயிரக்கணக்கான வெளிநாட்டினர்கள் பதிவுச் செய்யாமல் வசித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், மலேசியாவில் உள்ள பல அகதிகளை மலேசிய அரசு அகதிகளாக அங்கீகரிக்காத நிலையில் அவர்கள் சட்டவிரோதமாக குடியேறிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.