செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு!

இந்தியாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு!

3 minutes read

சென்னை: தமிழகத்தில் கிராமப்புற, பின்தங்கிய நிலையிலேயே உள்ளவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி  படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் தொடர்பான சட்டமுன்வடிவினை அவையிலே  அறிமுகப்படுத்த விழைகிறேன்.

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களைவிட, கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயின்ற  மாணவர்கள் மிக குறைந்த எண்ணிக்கையில் சேர்க்கை பெறுவதை கருத்திலே கொண்டு, 1997ம் ஆண்டு, கிராமப்புற பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.  முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டண சலுகை அளிக்கப்பட்டது. கிராமப்புற மாணவர்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களை கருத்திலே கொண்டு, 2006ம் ஆண்டு,  தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, 2007-08ம் ஆண்டு முதல் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நமது மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுடன் போட்டியிட்டு, அவர்கள் விரும்பக்கூடிய உயர் கல்வியினை பெறுவதும், தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதும் மிகவும் கடினமாக இருக்கிறது. பல்வேறு சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி பெறுவதில் சமவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. ஏற்கனவே, அரசு பள்ளியில் படித்த மாணாக்கர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தேசிய தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், 7.5 சதவீத  உள்ஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.

மருத்துவ படிப்பை போன்றே, கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, பொறியியல், சட்டம் போன்ற இதர தொழிற்கல்விகளிலும், அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவில் இருக்கிற காரணத்தால்,  அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலைகள், அத்தகைய மாணவர்கள் அனுபவித்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பின், மற்றும் பல்வேறு வகைகளிலான தொழிற்கல்வி படிப்புகள், கல்வி நிறுவனங்களில் அவர்களின் முந்தைய சேர்க்கை தொடர்பான சிக்கல்களை ஆய்வு செய்து மற்றும் அவர்களது குறைந்த பிரதிநிதித்துவத்திற்கு மேற்கூறப்பட்ட காரணங்கள் வழிவகுத்திருந்தால், அவர்களின்  பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில், மூத்த அலுவலர்களை கொண்ட ஓர் ஆணையமானது அரசால் அமைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பலவகையான பள்ளிகளில் ஏறக்குறைய 1.3 கோடி மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2019-20 கல்வியாண்டில் மேல்நிலை கல்வி இரண்டாம் ஆண்டு பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 8.5 லட்சம் ஆகும். அவர்களுள் 3.45 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் ஆவார்கள். பொறியியல் கல்வியில், 2020-21 கல்வியாண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் 0.83 சதவீதம் ஆகும்.  இதேபோன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முறையே, 6.31 சதவீதம் மற்றும் 0.44 சதவீதம் மட்டுமே சேர்க்கை பெற்றுள்ளனர்.  

மற்ற தொழிற்கல்வி படிப்புகளான, கால்நடை மருத்துவ படிப்பிலும் 2020-21 கல்வியாண்டில் அரசு பள்ளி மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் 3 சதவீதம் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் குறைவு. இதே நிலையே மீன்வளம் தொழிற்கல்வி படிப்பிலும் நிலவுகிறது. கடந்த ஆண்டில், 3.7 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களே இப்படிப்பில் சேர்ந்துள்ளனர். வேளாண்மை தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை 4.89 சதவீதமாக உள்ளது. திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகத்திற்கான மாணவர் சேர்க்கையானது, பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடைபெறுகிறது.

ஏழ்மை நிலை, அறியாமை, போதிய வழிகாட்டுதல் இன்மை காரணமாக, அரசு பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தொழிற்கல்வி படிப்புகள் குறித்த விழிப்புணர்வினை குறைவாக பெற்றுள்ளனர். எனவே இதனை நன்கு ஆய்வுசெய்து, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த பல தீர்வுகளை பரிந்துரைத்ததோடு மட்டுமல்லாமல்,  தொழிற்கல்வி படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்கு குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என ஆணையம்  பரிந்துரைத்துள்ளது.

ஏற்கனவே, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கியுள்ளதுபோல, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து இடஒதுக்கீட்டு பிரிவுகளிலும், 7.5 சதவீதம் இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான சட்டமுன்வடிவு இந்த அவையிலே கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலை தொழிற்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் தொடர்பான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு நன்றி தெரிவித்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசினர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலும் ஏழை எளிய மாணவர்கள்தான் படிக்கிறார்கள். அவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக உயர் கல்வி கற்க முடியாத சூழ்நிலை உள்ளது. தற்போது முதல்வர் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவை அதிமுக சார்பில் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* தொழிற்கல்வி படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதத்திற்கு குறையாமல் முன்னுரிமை வழங்கலாம் என ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
* ஏற்கனவே, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீதம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More