வெளிநாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
இம் மாத ஆரம்பத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த நடவடிக்கையின் மூலம், 50 வீதம் அல்லது அதற்கும் குறைவான மின்சார வாகனத்தை இறக்குமதி செய்யும் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது.
ஒருவர் 3,000 அமெரிக்க டொலருக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்திருந்தால், மின்சார மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இதற்கிடையில், 20,000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்தவர்கள், இலங்கைக்கு அனுப்பப்படும் தொகையில் பாதி விலையில், அதிகபட்சமாக 65,000 அமெரிக்க டொலர்கள் வரையிலான மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவர்.
எவ்வாறாயினும், அவர்கள் இறக்குமதி செய்யும் வாகனத்தை மின்னேற்றம் செய்வதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு ஒரு சூரிய சக்தி அமைப்பையும் வாங்க வேண்டும் அல்லது இறக்குமதி செய்ய வேண்டும்.
ஏனெனில் இந்த மின்சார வாகனங்கள் தேசிய மின் கட்டமைப்பின் மூலம் மின்னேற்றம் செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. இதேவேளை, இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக மோசடியான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சு எச்சரித்துள்ளது.