எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் படம் “கலைவேந்தன்“.
கதாநாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் “அக்கு “என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான படமாக பேசப்பட்டது. கதாநாயகியாக சனம்ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர். மற்றும் முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார்,ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான். படத்தை ஆர்.கே.பரசுராம் இயக்குகிறார். இவர் திரைப்பட கலூரியில் பயிற்சி பெற்றதுடன் கனடாவிலும் இயக்குனர் பயிற்சிப்பெற்றிருக்கிறார். எஸ்.கார்த்திக் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…. ஓவினாம் என்ற தற்காப்பு கலையின் மாஸ்டராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஏற்பட்ட காதலில் ஒரு பிரச்னை வருகிறது. இது கதாநாயகியின் பெற்றோருக்கு தெரியவர பிரச்சனை பெரிதாகிறது. இதற்கு இடையில் காதலர்களுக்கு நடுவில் வில்லனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.
இடையில் கதாநாயகி கொல்லப்படுகிறார்.கொலை செய்தது யார் ? என்ற வினாவுக்கு விடை பரபரப்பான திரைக்கதையின் மூலம் வெள்ளித்திரையில் வெளிச்சமாகும். ஓவினாம் தற்காப்பு கலை என்பது ஜூடோ, குங் பூ, கராத்தே இந்த மூன்றின் கலவைக்கு பெயர்தான் ஓவினாம். இந்த கலையை பயன்படுத்தி வரும் முதல் திரைப்படம் “ கலை வேந்தன்“ தான்.
இந்த ஓவினாம் பயிற்சி பெற்ற நூறு கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது கலை வேந்தன் என்றார் இயக்குனர் ஆர்.கே.பரசுராம்.