பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்று பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் சர்ச்சை கருத்துக்களை பேசி சிக்கலில் மாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடந்த விழா ஒன்றில் கே.ஜே.ஜேசுதாஸ் பேசும் போது ஆண்கள் போல் பெண்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது. ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களுக்கு தொல்லை தரக் கூடாது. எதை மறைத்து வைக்க வேண்டுமோ அதை மறைக்க வேண்டும். எளிமையையும் அன்பையும் உயர்ந்த குணங்களை கொண்டவர்கள் பெண்கள். இது போன்ற உடைகள் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்றார்.
ஜேசுதாஸ் பேச்சுக்கு பெண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளா முழுவதும் போராட்டங்களும் நடந்தது. மகளிர் காங்கிரசார் ஜேசுதாசுக்கு எதிராக ஊர்வலம் நடத்தி போலீசில் புகார் அளித்தனர். மகளிர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் ஜேசுதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஜேசுதாஸ் பேச்சுக்கு கேரளாவில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர். நிறைய ஆண்கள் ஜேசுதாஸ் பேச்சு சரியானதுதான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். பெண்கள் அமைப்புகளை சேர்ந்த ஒரு பிரிவினரும் ஜேசுதாஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த மறுத்து விட்டனர்.
ஜேசுதாஸ் பேச்சு பெண்கள் ஜீன்ஸ் அணியலாமா? அணியக் கூடாதா? என்ற பெரிய விவாதப் பொருளாக மாறி உள்ளது.