ரம்யா தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் படங்களில் நடித்துள்ளார். கன்னடத்திலும் முன்னணி நடிகையாக இருந்தார்.
கர்நாடக அரசியலிலும் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவருக்கு இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வழங்கப்பட்டது.
மாண்டியா பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆறு மாதங்களுக்கு பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தோல்வியால் மனம் உடைந்தார். அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்தார்.
‘ஆர்யன்’ என்ற கன்னட படத்தில் மட்டும் நடித்தார். அப்படம் ரிலீசாகி விட்டது. அடுத்து புனித் ராஜ்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். பிறகு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். அதன் பிறகுதான் அவரை காணவில்லை என்கின்றனர்.
டுவிட்டரில் அடிக்கடி கருத்துக்களை பதிவு செய்வது வழக்கம். கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து டுவிட்டரிலும் அவர் வரவில்லை.
அரசியல் நிகழ்ச்சிகள், சினிமா விழாக்கள் போன்றவற்றிலும் பங்கேற்கவில்லை. வீட்டிலும் அவர் இல்லை என்கிறார்கள். ரம்யா எங்கு சென்றார் என்ன ஆனார் என்பது மர்மமாக இருக்கிறது.