பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக். இவர் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். நிர்வாண போட்டோ விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கியவர். கடந்த மே மாதம் இவருக்கும், பஷீருக்கும் திருமணம் நடந்தது. அப்போது ஒரு பாடலுக்கு நடன நிகழ்ச்சி நடந்தது. அந்த பாடல் காட்சிகள் மதத்தை அவமதித்து சித்தரிக்கப்பட்டதாகவும், கேலி செய்வது போன்றும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சி பாகிஸ்தானின் பிரபலமான ஜியோ டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. அது மதவாதிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் மத அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நடிகை வீணாமாலிக் அவரது கணவர் பஷீர், ஜியோ டி.வி.யின் உரிமையாளர் மிர்ஷகில் –உர் ரஹ்மான் மற்றும் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷகிஸ்தபிவாகித் ஆகிய 3 பேர் மீது கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது.
இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மத அவமதிப்பு செய்ததாக நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டி.வி. உரிமையாளர் மிர் ஷகில்– உர்–ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷசிஸ்தாவாசித் ஆகியோருக்கு தலா 26 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் தலா ரு.13 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னதாக இப் பிரச்சினைக்காக இவர்களுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர். எனவே இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். டி.வி. உரிமையாளர் ரஹ்மான் இங்கிலாந்திலும் மற்ற 3 பேரும் வெளிநாடுகளிலும் தங்கியுள்ளனர்.