மாதுரிதீட்சீத் இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர். ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தார். மாதுரிதீட்சித்துக்கும் அமெரிக்காவில் டாக்டராக உள்ள ஸ்ரீராம் மாதவ்க்கும் 1999–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அரின், ரேயான் என இரு மகன்கள் உள்ளனர்.
மாதுரிதீட்சீத் தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசிக்கிறார். அவரது மொபைல் போனுக்கு கடந்த சில தினங்களாக மிரட்டல் எஸ்.எம்.எஸ்.கள் வந்தன. எனக்கு பணம் கொடு இல்லையேல் உனது இரு குழந்தைகளையும் கடத்துவேன். எனக்கு மும்பை தாதாக்களுடன் தொடர்பு உள்ளது. பணம் தராவிட்டால் அவர்களை வைத்து குழந்தைகளை கடத்தி கொன்று விடுவேன் என்று எஸ்.எம்.எஸ் தகவல்கள் வந்தன.
இதனால் அதிர்ச்சியான மாதுரிதீட்சீத் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மும்பை ஓட்டல் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்க்கும் பிரவீன்குமார் பிரதான் என்ற 23 வயது இளைஞர் தான் இந்த எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியதாக போலீசார் கண்டு பிடித்தனர். அவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து இளைஞரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவனிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.