சோழ மன்னர்களில், வீரத்திலும், மக்கள் நலனிலும், கடவுள் பக்தியிலும், சான்றோரை போற்றுவதிலும் தலைசிறந்து விளங்கிய மாமன்னன் இராஜராஜ சோழன் அரியணை ஏறிய வரலாற்றை, தனக்கே உரிய பாணியில், வரலாற்று உண்மைகளை சார்ந்து அமரர் கல்கி அவர்களால் புனையப்பட்ட காவியம்தான் ‘பொன்னியின் செல்வன்’.
தமிழர் பெருமை. வெறும் தற்பெருமை அல்ல… வரலாற்று உண்மை… என்று உலகிற்கு பறைசாற்றியது இக்காவியம். இக்காவியத்தை திரைப்படமாக்க பல முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் முன்வந்தனர். ஆனால், அந்த முயற்சியில் அவர்களுக்கு தோல்வியே கிடைத்தது. ஒருசிலர், தொலைக்காட்சி தொடராகவும் எடுக்க முன்வந்தனர். அவர்களுக்கும் அதில் தோல்வியே கிட்டியது.
இந்நிலையில், இக்காவியத்தை இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார்கள். வளமான தமிழகம் இயக்கத்தின் நிறுவனரான பொ.சரவணராஜா இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளார். இன்று உலகையை தன் கைபேசியில் வைத்திருக்கும் இன்றைய இளைய தலைமுறையையும் இக்காவியம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
இன்று இப்படத்திற்கான தொடக்கவிழா சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற விருக்கிறது.